அகர்தலா: வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் மார்ச் மாதத்தில் நிறைவடைகிறது. திரிபுராவில் பிப்ரவரி16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில் பிப்ரவரி 27-ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று கடந்த ஜனவரியில் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி திரிபுராவில் நாளைசட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம்நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. திரிபுராவில் தற்போது மாணிக் சாஹா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் பாஜக 55 தொகுதிகளிலும் அதன்கூட்டணி கட்சியான ஐபிஎப்டி6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஒரு தொகுதியில் மட்டும் பாஜகவுக்கு போட்டியாக கூட்டணி கட்சியான ஐபிஎப்டியும் வேட்பாளரை நிறுத்தி உள்ளது.
ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் 46 தொகுதிகளிலும் காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் சுயேச்சைக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஒட்டுமொத்தமாக திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 20 பேர் பெண்கள் ஆவர். மொத்தம் 28.12 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்காக 3,328 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
இதில் 28 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் 1,100 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.