புதுடெல்லி: நில அபகரிப்பு ஊஅழல் வழக்கில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மருமகனான நவீன்குமார், மகள் ஜெயப்பிரியா ஆகியோர் நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நேற்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள எட்டு கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மருமகனான நவீன்குமார் ஆகியோருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.
இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித் திட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்தார். ஜெயக்குமார் அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் அவரது மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் கடந்த மாதம் 31ம் தேதி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எச்.ராய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இதுதொடர்பாக டி.ஜெயக்குமார் உட்பட, அவரது மருமகனான நவீன்குமார், மகள் ஜெயப்பிரியா உள்ளிட்டோர் அடுத்த நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.