பட்டியலினத்தவரை அவதூறாக பேசிய ஊராட்சிமன்ற துணைத்தலைவியின் கணவருக்கு எதிராக போராட்டம்: வகுப்புகளை புறக்கணித்த மாணவிகள்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மதூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் மதூர் கிராமத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றிவரும் விஜயகுமாரி என்பவர் மாணவ – மாணவிகளை பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்யச் சொன்னதாக புகார்கள் எழுந்தது. இதுசம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன் நேற்றுமுன்தினம் பள்ளிக்கு நேரில் வந்து ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது ஊராட்சி மன்ற துணைத் தலைவி சரஸ்வதியின் கணவர் தமிழ்ச்செல்வன் என்பவர் பள்ளியில் நின்றுக்கொண்டிருந்த பட்டியலின மாணவிகளின் பெற்றோரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பட்டியலின மாணவர்கள் பெற்றோர், நேற்று தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வகுப்புகளை புறக்கணித்து பஸ் நிலையத்தில் அமரவைத்துள்ளனர். மேலும் பட்டியலினத்தவரை அவதூறாக பேசிய சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்புராயன், வட்டார கல்வி அலுவலர்கள் சுந்தர்ராஜன், ரூபிடேனியல் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஜீலியர்சீசர் ஆகியோர் விரைந்து வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்களும் பெற்றோரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.