மக்களே மிஸ் பண்ணிடாதீங்க… மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள்!!

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. தமிழகம் முழுவதும் உள்ள மின்நுகர்வோர், தங்களின் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென மின்துறை கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
நவம்பர் 28ம் தேதி முதல் பொதுமக்கள் மின் மீட்டர் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். மேலும், மின்சார இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டுமென கால அவகாசத்தை மின்துறை அறிவித்திருந்தது. இருப்பினும், ஆதார் இணைப்பு தொடர்பான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பின்னர் மின் நுகர்வோரின் வசதிக்காக ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டது.  அதன் பிறகும்  பெரும்பாலானோர் இணைக்காததால்  மீண்டும் கால அவகாசத்தை நீட்டித்து பிப்ரவரி 15ம் தேதி வரை,  அதாவது இன்று வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது.  இந்த நிலையில் கடந்த  திங்கள்கிழமை வரை 2 கோடியே 61 லட்சம் மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை, மின் இணைப்புடன் இணைத்துள்ளனர். அத்துடன் சுமார் 6 லட்சம் பேர் இன்னும் இணைக்கவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் மின் இணைப்பு  என்னுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.  இதனையடுத்து  மின் இணைப்பு எண்ணுடன்,  ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் சலுகைகள் ரத்தாகுமா? அல்லது கூடுதல் அவகாசம் வழங்கப்படுமா   என்பது குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.