கிருஷ்ணகிரி எஸ்.பி விளக்கம்; ராணுவ வீரர் கொலையில் நடந்த உண்மை இதுதான்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்த வீரர் பிரபு உயிரிழந்துள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்து கொல்லப்பட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். விடுமுறையில் குடும்பத்துடன் இனிமையாக நாட்களை கழித்து விட்டு மீண்டும் இந்திய எல்லைக்கு சென்று காவல் காக்கும் பணியில் ஈடுபட திட்டமிட்டிருந்தவரின் நிலை இப்படி மாறும் என ஒருவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

நடந்த சம்பவம் இதுதான்

பிப்ரவரி 8ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியில் உள்ள குடிநீர் தொட்டி அருகே ராணுவ வீரர்களான பிரபாகரன் மற்றும் அவரது சகோதரர் பிரபு ஆகியோரின் குடும்பத்தினர் துணி துவைத்து கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக வந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி தட்டிக் கேட்டுள்ளார்.

குடிநீர் கிடைக்கும் இடத்தில் இப்படி துணி துவைக்கலாமா? எனக் கோபமாக கேட்டார். உடனே பிரபு பதிலுக்கு அதிரடியாக பேசியுள்ளார். தொடர்ந்து வாக்குவாதமாக மாறியுள்ளது. பின்னர் அனைவரும் களைந்து செல்ல அன்று மாலையில் சின்னசாமி 10க்கும் மேற்பட்டோருடன் வந்துள்ளார். அப்போது பிரபுவின் குடும்பத்தினருக்கும், சின்னசாமி தரப்பிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

திமுக கவுன்சிலர் தாக்குதல்

ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டதில் பிரபு, மனைவி பிரியா, சகோதரர் பிரபாகரன், தந்தை மாதையன் ஆகியோர் காயமடைந்தனர். உடனே ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில் சின்னசாமி மீது பிரபுவின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார். இதனால் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. சின்னசாமி உள்ளிட்ட 9 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டினர். தற்போது அனைவரும் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி எஸ்.பி விளக்கம்

இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எஸ்.பி சரோஜ் குமார் தாகூர் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராணுவ வீரரின் மரணம் தொடர்பான வழக்கில் 9 பேர் சம்பந்தப்பட்டிருந்தனர்.

ராணுவ ரெஜிமெண்டிற்கு தகவல்

அவர்கள் அனைவரும் கைதாகி ரிமாண்ட் செய்யப்பட்டு விட்டது. இதில் முதல் குற்றவாளி சின்னசாமி. இந்த சம்பவம் பிரபாகரன் மற்றும் சின்னசாமி இடையில் நடந்த சிறிய மோதலின் விளைவாக ஏற்பட்ட விபரீதமே ஆகும். ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தது பற்றி சம்பந்தப்பட்ட ரெஜிமெண்ட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சரியான திசையில் விசாரிக்கப்பட்டு உரிய தண்டனை பெற்று தரப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என ராணுவ அதிகாரிகளுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.