குஜராத்தில், ராஷ்டிர கதா ஷிவிர் என்ற பொது நல நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், வேதிக் இயக்க அறக்கட்டளை நிறுவனர் சுவாமி தர்மபந்து, அந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள், மத்திய துணை ராணுவப்படைகளின் அதிகாரிகள், ஏராளமான மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுப் பேசினார்.
அப்போது பேசிய அவர், “உலகிலேயே மிகவும் தொன்மையான, செழுமையான மொழி தமிழ். அது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்டது. அதை பேசுவதிலும், தமிழர்களோடு பழகுவதிலும் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் வாழ்ந்த கவிஞர்கள், முனிவர்கள், சன்னியாசிகள் என பலரும் தமிழின் பாரம்பரியத்தை நமக்காக விட்டுச் சென்றிருக்கின்றனர். நம்மை அதுதான் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இளம் தலைமுறைக்கு நாட்டை வழிநடத்தக் கூடிய மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது.

அந்தப் பயணத்தில் எல்லையற்ற வாய்ப்புகள் அவர்களுக்காக காத்திருக்கிறது. ஆலமரத்தின் விதைகளாக இன்று காணும் இளம் தலைமுறையினர், பெரிதாக கனவு கண்டு, பெரிதாக சாதிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அது அவர்களுடைய சொந்த இழப்பாகவே கருதப்படும்.
மதம், மொழி, இனம் ஆகியவற்றைக் கடந்து இந்தியர்களை ஒருங்கிணைப்பதுதான் பாரதம். என்றும் அதுவே நமது ஒற்றுமை உணர்வைத் தாங்கிப் பிடிக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.