விருதுநகர் மாவட்டத்தில் கேக்கில் விஷம் கலந்து இரண்டு மகள்களுக்கு கொடுத்துவிட்டு தந்தையும் சாப்பிட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சின்னபேராலி பகுதியை சேர்ந்தவர் இரும்பு வியாபாரி முரளி குமார் (37). இவரது மனைவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு அட்சயா(10), அகல்யா(7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த முரளிகுமார், கேக்கில் விஷம் தடவி தனது இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு அதை அவரும் சாப்பிட்டுள்ளார்.
இதையடுத்து இவர்கள் நீண்ட நேரமாக வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அப்பொழுது முரளிகுமார் மற்றும் இரண்டு குழந்தைகள் மயங்கி கிடந்துள்ளனர். இதைத்தொடர்ந்து உடனடியாக இவர்கள் மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.