கோவை நீதிமன்ற வளாகம் அருகே கடந்த திங்கள்கிழமை கோகுல் என்ற இளைஞர் கொலைசெய்யப்பட்டார். பட்டப்பகலில் மக்கள் முன்னிலையில் கொலைசெய்துவிட்டு, கொலையாளிகள் சகஜமாக சென்ற வீடியோ பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக 11 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை, கோவை அழைத்து வரும்போது தப்பிக்க முயன்று காவலர்களைத் தாக்கியதால், இருவர் கால் பகுதியில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
ரத்தினபுரி, கண்ணப்பநகர், காமராஜபுரம், சரவணம்பட்டி சுற்று வட்டாரங்களிலுள்ள இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் கஞ்சா, ரெளடஸம் போன்ற நெட்வொர்க்கில் இயங்கி வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு குரங்கு ஶ்ரீராம் என்ற இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, பழிதீர்க்கும் விதமாகத்தான் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கின்றனர்.
“அதிகாரம் வேண்டும் என்றால் எவனையும் அழிப்போம்”, “ரெளடிஸம் பழகு” போன்ற வாசகங்களுடன் பட்டாக்கத்தி, துப்பாக்கி சகிதம் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். கோகுலின் மறைவுக்கு அவரின் நண்பர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருக்கின்றனர். சில பதிவுகளில் கோகுல் படத்துடன், “பழிக்குப் பழி தொடரும்.

உங்களுக்காக காத்திருக்கிறாம் ஹேட்டர்ஸ். விரைவில் சந்திக்கிறோம்” என்று கூறியிருக்கின்றனர். இவர்களின் பதிவுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.