சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழ்நாடு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் உள்ளது பாலாறு வனப்பகுதி. இங்கு தமிழ்நாடு மீனவர்கள் காவிரியும், பாலாறும் கலக்கும் இடத்தில் பரிசலில் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்ற மீனவர்கள் பாலாற்றில் மீன் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதில் சிலர் தப்பி கிராமங்களுக்கு சென்று விட்டனர். ஆனால் கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜாவை காணவில்லை.
இதனால் கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூட்டில் அவர் பலியாகி இருக்கலாம் என கிராம மக்கள் பாலாற்றங்கரையில் தேடி வருகிறார்கள்.
பாலாற்றங்கரையில் இருந்த பரிசல்களையும் வலைகளையும் கர்நாடக வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நேற்று மாலை கர்நாடக வனத்துறையினர் பரிசல் மூலம் பாலாற்றங்கரையில் துப்பாக்கி சூட்டில் யாரேனும் பலியாகி நீரில் மூழ்கியுள்ளனரா எனத் தேடிப் பார்த்து சென்றுள்ளனர்.
இதனால் இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. பதட்டமான சூழல் நிலவி வருவதால் பாலாற்றில் உள்ள கர்நாடக வனத்துறை சோதனை சாவடிக்கு கர்நாடக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.