திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது!!

அகர்தலா: திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. திரிபுரா மக்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து வாக்களித்து வருகின்றனர். வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பாஜ – ஐபிஎப்டி கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநில முதல்வராக மாணிக் சாஹா பதவி வகிக்கிறார். 60 சட்டப்பேரவைகளை கொண்ட இம்மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்க உள்ளது. இம்முறை பாஜ கூட்டணிக்கு போட்டியாக காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் கூட்டணி அமைத்துள்ளன. அதோடு, வடகிழக்கு மாநிலத்தின் முன்னாள் அரசு குடும்பங்களின் வாரிசுகளால் உருவாக்கப்பட்ட பிராந்தியக் கட்சியான திப்ரா மோதாவும் போட்டியிடுகிறது. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது.

பாஜ 55 தொகுதிகளிலும், ஐபிஎப்டி 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இரு கட்சிகளும் கூட்டணியாக இருந்தாலும் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இதே போல மார்க்சிஸ்ட் கட்சி 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதியிலும் களமிறங்குகிறது. திப்ரா மோதா 42 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மாநில முதல்வர் மாணிக் சாஹா டவுன் பர்டோவாலி தொகதியிலும், ஒன்றிய அமைச்சர் பிரதிமா பவுமிக் தன்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மார்க்சிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான மார்க்சிஸ்டின் தேசிய செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி சப்ரூம் தொகுதியில் களமிறங்கி உள்ளார். இத்தேர்தலில் வெற்றி பெற்று பாஜ மீண்டும் ஆட்சியை தொடர பிரதமர் மோடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்துள்ளனர். இதுதவிர, திரிணாமுல் காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மாநிலத்தில் மொத்தம் 28.13 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் 13.53 லட்சம் பேர் பெண்கள். களமிறங்கி உள்ள 259 வேட்பாளர்களில் 20 பேர் பெண்கள் ஆவர்.

மொத்தம் 3,337 வாக்குச்சாவடிகளில், 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 28 வாக்குச்சாவடிகள் மிகுந்த பதற்றமானவை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த 25,000 துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர மாநில போலீசார் உட்பட 31,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளிநபர்கள் நுழைவதை தடுக்க சர்வதேச மற்றும் மாநில எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 4 மணி வரை நடக்கும். தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.