விருதுநகரில் தந்தையே, தன் சொந்த மகள்களுக்கு கேக்கில் விஷமருந்து தடவிக்கொடுத்து கொலைசெய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸாரிடம் விசாரிக்கையில், “விருதுநகரை அடுத்த சின்னபோராலி பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 37) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவருக்கு இரு மகள்கள் இருக்கின்றனர். மோகனின் மனைவி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மனைவி இறந்ததிலிருந்து மனஉளைச்சலுடன் இருந்து வந்த மோகன் தன்னுடைய இரண்டு மகள்களை வளர்ப்பதற்கு சிரமப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனைவி இறந்த துக்கம்தாளாமல், விருதுநகரிலுள்ள பேக்கரியில் மகள்களுக்காக கேக் வாங்கியிருக்கிறார். பின்னர் வீட்டுக்கு வரும்வழியில் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் குருணை மருந்தை கேக்கில் தடவி அதை மகள்களுக்குக் கொடுத்திருக்கிறார். தந்தை தருவது விஷமென்று அறியாத சிறுமிகளும், அவர்மீதுள்ள நம்பிக்கையில் கேக்கை வாங்கிச் சாப்பிட்டிருக்கின்றனர். பின்னர் அதே விஷக்கேக்கை மோகனும் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே மோகன் உட்பட சிறுமிகள் இருவரும் வாந்தி எடுத்து மயக்க நிலைக்குச் சென்றதாகத் தெரிகிறது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பதறிப்போய் மூவரையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து கிராம நிர்வாகி அளித்தப் புகாரின்பேரில் மோகன்மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.