சென்னையில் உள்ள விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பத்ரி நாராயணன். இவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த நிலையில், பத்ரி நாராயணன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது தாயை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளார்.
இதற்கிடையே, அவர் ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, இரண்டு முறை ஏடிஎம்மின் எண்ணை தவறாக பதிவிட்டதாக கார்டு பிளாக் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பிய பத்ரி நாராயணனை செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு நபர், தங்களது பான் கார்டு காலாவதி ஆகிவிட்டதால் ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டது. பான்கார்டை புதுப்பித்தால் ஏடிஎம் கார்டு மீண்டும் வேலை செய்யும் என்றும் தெரிவித்து விட்டு ஒரு லிங்கையும் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து பத்ரி நாராயணன் பான் கார்டை புதுப்பிப்பதற்கு அந்த நபர் அனுப்பிய லிங்கை கிளிக் செய்துள்ளார். அப்போது பத்ரி கணக்கில் இருந்து 10 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.
இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த பத்ரி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி, சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.