சென்னை: ஈரோடு கிழக்கில் தோல்வி அடைந்த பிறகு காங்கிரஸ் மீது திமுக பழியை போடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “திமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தீக்குளிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு உள்ளன. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக தவறிவிட்டது.
எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்யும் கனிமொழிக்கு பழைய வரலாறு தெரியாது. அதிமுக ஆட்சியை கலைத்த இந்திரா காந்தியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்தவர் கருணாநிதி. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆம்லேட், டீ போடும் திமுக அமைச்சர்கள் பாத்திரத்தை மட்டும் தான் கழுவவில்லை.
அதிமுக ஆட்சிக் காலத்தில் இலங்கை பயந்து இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. ஈரோடு கிழக்கில் தோல்வி அடைந்த பிறகு காங்கிரஸ் மீது திமுக பழியைப் போடும். அத்துமீறல்கள், அநியாயங்களை தாண்டி அதிமுக வெற்றி பெறுவது உறுதி.” என்று கூறினார்.