கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு: ஸ்டாலின் கண்டனம் – இதானா சார் உங்க டக்கு?

கர்நாடக மாநில வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் கர்நாடக வனத்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா (40), இளையபெருமாள் (35), தர்மபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி (30) ஆகிய மூன்று பேரும் கடந்த செவ்வாய் அன்று காவிரியும் பாலாறும் இணையும் இடத்தில் மீன் பிடித்து வந்துள்ளனர். காலங்காலமாக இந்த பகுதியில் உள்ள மக்கள் இங்கு மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக – தமிழ்நாடு எல்லையில் உள்ளது இந்த பகுதி.

மூன்று பேரும் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் தப்பித்து விட ராஜா மட்டும் குண்டடி பட்டு ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல் நேற்று தேடி எடுக்கப்பட்டது.

கர்நாடக வனத்துறை தரப்பிலோ அவர்கள் மூவரும் கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக வனத்துறையின் அத்துமீறலால் தமிழர் ஒருவர் கொல்லப்பட்ட போதும் தமிழ்நாடு அரசு இது குறித்து மௌனமாக இருந்து வந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார். வனத்துறை செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

அந்த அறிவிப்பில், “சேலம் மாவட்டம், கொளத்தூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 14.2.2023 அன்று காவிரியாற்றில் மீன்பிடிக்கச் சென்றார்கள் என்றும், அவர்கள் மீது கர்நாடக மாநில வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ராஜா என்ற காரவடையான் உயிரிழந்துள்ளார் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜா என்ற காரவடையான் உடல் சென்னம்பட்டி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த ராஜா என்ற காரவடையானை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

ராஜாவை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் கண்டனம் மட்டும் தெரிவித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.