திருச்சி முசிறி காவல் நிலையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஒவ்வொரு வருடமும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் பொதுமக்களுக்கு சிறந்த சேவை, குற்ற நடவடிக்கைகள் குறைவு, அதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போன்றவற்றின் அடிப்படையில் மத்திய புலனாய்வு குழு ஆய்வு செய்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது திருச்சி மாவட்டம் முசிறி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் இருந்து தமிழக காவல்துறையின் தலைமையிடமான சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து முசிறி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் நாகராஜ், தலைமை காவலர் மகாமுனி, காவலர் ஆனந்தராஜ் ஆகியோர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.