துருக்கி – சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்தது…!

இஸ்தான்புல்,

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் கடந்த 6-ம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கங்கள் 7.7 மற்றும் 7.6 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி – சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன. நிலநடுக்கம் அதிகாலை ஏற்பட்டதால் மக்கள் வீடுகளில் உறக்கொண்டிருந்த நேரத்தில் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

இந்நிலையில், துருக்கி – சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 39 ஆயிரத்து 672 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 3 ஆயிரத்து 688 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.

நிலநடுக்கம் கிட்டத்தட்ட 2 வாரம் ஆன நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் துருக்கியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய ஹகென் யாசினொலு என்ற 45 வயது நபர் 278 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.