சேலத்தில் போலி நிறுவனம் நடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி சுமார் 10 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் அடுக்குமாடி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த யூரோ நெக்ஸஸ் என்ற நிறுவனத்தை மகுடஞ்சாவடி எர்ணபுரத்தை சேர்ந்த சபரீஷ் குமார் மற்றும் செங்கோட்டையை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் நடத்தி வந்துள்ளனர்.
இவர்கள் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள இளைஞர்களிடம் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்டவரிடம் ரூ.10 கோடி வரை வசூல் செய்துள்ளனர்.
ஆனால் சபரீஷ் குமார் மற்றும் ஆனந்த ஆகியோர் பேசியபடி வேலை வாங்கி தராமல் இழுத்து அடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பணத்தை திருப்பி கேட்ட பொழுது சபரீஷ் குமார் மற்றும் ஆனந்த் ஆகியோர் தலைமறைவானதை அடுத்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பாதிக்கப்பட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததுடன் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 10 கோடி ரூபாய் உடன் தலைமறைவான கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.