கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு விவகாரம்: மீனவர் ராஜாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.! கருணை அடிப்படையில் மனைவிக்கு வேலை

சேலம்: கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில், மர்மமான முறையில் இறந்த மீனவர் ராஜாவின் உடல் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது மனைவிக்கு தனியார் பள்ளியில் குழந்தைகள் பராமரிப்பாளர் பணியை வழங்கியுள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் கோவிந்தபாடி பகுதியை சேர்ந்தவர் காரவடையான் (எ) ராஜா (39). மீன் பிடி தொழிலாளியான இவர், அவ்வப்போது தனது நண்பர்களுடன் வேட்டைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 14ம் தேதி ராஜா, தனது நண்பர்களான ரவி, இளையபெருமாள் ஆகியோருடன் பரிசலில் அடிபாலாறு பகுதிக்கு சென்று வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், ரவி, இளையபெருமாள் தப்பி வந்தனர். ராஜா மாயமானார். இந்நிலையில் 3வது நாளில் ஈரோடு வனப்பகுதிக்கு உட்பட்ட சென்னகிரி பாலாறு பகுதியில் ராஜாவின் சடலம் மீட்கப்பட்டது. இதுபற்றி ஈரோடு பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜாவின் உயிரிழப்புக்கு காரணமான கர்நாடக வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி அவரது மனைவி பவுனா மற்றும் உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இதனால், பிரேதப்பரிசோதனை செய்வததில் தாமதம் ஏற்பட்டது.

மீனவர் ராஜா சாவு குறித்து சேலம் ஆர்டிஓ விஷ்ணுவர்த்தினி விசாரணை நடத்தினார். இதனால் பிரேதப்பரிசோதனைக்கு ஒப்புக்கொண்டனர். பின்னர், உடலை மருத்துவர் கோகுலரமணன் தலைமையிலான குழுவினர் பிரேதப்பரிசோதனை செய்தனர். அதில், உடலில் துப்பாக்கி குண்டு துளைத்தற்கான அறிகுறி தென்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் நேற்றிரவு சடலத்தை வாங்க மறுத்து, மனைவி மற்றும் உறவினர்கள் புறப்பட்டுச் சென்றனர். இந்நிலையில் நேற்றிரவு சேலம் மாவட்ட எஸ்பி சிவக்குமாரிடம் ராஜாவின் உறவினர்கள் பேசினர். அதில், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவதாக தெரிவித்தனர். உடனே கருமலைக்கூடல் காவல்நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம், மாவட்ட செயலாளர் ராஜசேகர், தமிழ்குமரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். அதில், உயிரிழந்த ராஜாவின் உடலை பெற்றுச் சென்று அடக்கம் செய்கிறோம் என மனைவி பவுனா மற்றும் உறவினர்கள் கூறினர். அப்போது மாவட்ட எஸ்பி சிவக்குமார், கருணையின் அடிப்படையில் ராஜாவின் மனைவி பவுனாவிற்கு கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் பராமரிப்பாளர் வேலை வழங்குவதாக கூறி பள்ளி நிர்வாகிகளுடன் ஆணையை வழங்கினார். இதையடுத்து இன்று காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு ராஜாவின் உறவினர்கள் வந்தனர். அவர்களிடம், ஈரோடு பர்கூர் போலீசார், ராஜாவின் உடலை ஒப்படைத்தனர். உடனே மேட்டூருக்கு உடலை எடுத்துச் சென்றனர். அங்கு சொந்தகிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.