திரவுபதி முர்மு: சிவனும், சக்தியும்… கோவை ஈஷாவில் பக்தி பணம் கமழும் பரவச பேச்சு!

கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற
மகா சிவராத்திரி
விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய அவர், ஓம் நமசிவாய… சிவனாக இருக்கும் அனைத்திற்கும் நான் தலை வணங்குகிறேன்.

மகா சிவராத்திரி விழா

ஆதியோகி முன்னிலையில் நடைபெறும் இந்த மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதை ஆசிர்வதிக்கப்பட்டதாய் உணர்கிறேன். உலகின் பல்வேறு கலாச்சாரங்கள், பக்தி மற்றும் ஞானத்தின் பாதை குறித்து பேசுகிறோம். இவை அனைத்திற்கும் மூர்த்தியாக சிவன் விளங்குகிறார். அவர் குடும்ப வாழ்க்கையிலும் இருக்கிறார். அதே வேளையில் சந்நியாசியாகவும் உள்ளார்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

இந்த உலகின் முதல் யோகி மற்றும் முதல் ஞானி. சிவன் கருணை கடவுளாகவும், ஆக்ரோஷமான வடிவமாகவும் இருக்கிறார். முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக சிவன் காணப்படுகிறார். ஆக்கும், அழிக்கும் சக்திகளில் ஒன்றிணைந்த குறியீடாக உள்ளார். அறியாமை எனும் இருளின் முடிவாக, ஞான பாதையின் திறப்பாக இந்த மகா சிவராத்திரி விளங்குகிறது. வாழ்வின் உயரிய தேடல்களை கொண்டவர்களுக்கு இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆன்மீக பாதை

நவீன காலத்தின் போற்றத்தக்க ரிஷியாக விளங்கும் சத்குரு, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நம்முடைய ஆன்மீக அம்சங்களை எண்ணிலடங்கா மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார். ஏராளமான இளைஞர்களை ஆன்மீக பாதையில் ஈர்க்கும் யோகியாக இருக்கிறார். அவருடைய பேச்சு மற்றும் செயல்கள் மூலம் ஆன்மீகம் மட்டுமின்றி சமூக பொறுப்புணர்வையும் கற்று கொடுக்கிறார்.

சிறப்பு மிக்க நாள்

சுற்றுச்சூழல் சார்ந்த பல பணிகளையும் அவர் முன்னெடுத்துள்ளார். இந்த மகா சிவராத்திரி நாள் நமக்குள் இருக்கும் இருளை அகற்றட்டும். வளர்ச்சியும், நிறைவும் நிறைந்த வாழ்வை நமக்களிக்கட்டும். இந்த மகா சிவராத்திரியின் நல்லொளி நம் ஒவ்வொரு நாளின் பாதையையும் பிரகாசம் ஆக்கட்டும் என்று கூறினார். இதையடுத்து பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ், மகா சிவராத்திரி விழாவிற்கு வருகை தந்துள்ள குடியரசு தலைவருக்கு எங்களின் ஆத்மார்த்தமான நன்றி.

உண்மைக்கான தேடல்

மகா சிவராத்திரி சொர்க்கத்துக்கு செல்லும் நாளல்ல. எந்தவித சித்தாந்தம் மற்றும் நம்பிக்கையையும் கொடுக்கும் நாளும் அல்ல. உங்களுக்குள் உண்மைக்கான தேடுதலை தீவிரப்படுத்தும் நாள். நம்முடைய பாரத தேசத்தில் 50 கிலோமீட்டர் பயணித்தாலே அங்கு வாழும் மக்களின் உணவு பழக்கம், பண்பாடு போன்றவை வேறுபடுகின்றன.

மொழி, இனம், ஜாதி, கலாச்சாரம் போன்ற ஏராளமான முறைகளில் நாம் வேறுபட்டு காணப்பட்டாலும் நம்மை வெளிநாட்டவர்கள் ஒரே தேசத்தின் மக்களாகவே பார்க்கின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம் வாழ்நாள் முழுவதும் உண்மையை தேடும் தேடல் மிக்கவர்களாக நாம் இருக்கிறோம். எந்த ஒரு பிரச்சினையிலும் தீர்வு காணும் தேடல் மிக்கவர்களாக இருக்கிறோம். இதை இந்த மகா சிவராத்திரி நாளில் மேலும் தீவிரப்படுத்துங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.