ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரச்சாரத்திற்கு வரும் பொதுமக்களுக்கு உணவு மற்றும் பணம் விநியோகிக்கப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரச்சார கூட்டத்திற்கு வரும் பொது மக்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 மற்றும் உணவு வழங்கப்படுவதாக தெரிய வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் ஜெயகோபால் வீதியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் பணிமனையில் கடந்த மூன்று நாட்களாக மாலை நேரங்களில் வாக்கு சேகரிக்க சென்றவர்களுக்கு பணம் வழங்கவில்லை என பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வரும்பொழுது அவர்களுடன் செல்ல தினமும் 500 ரூபாய் தருவதாக பேசிவிட்டு கடந்த மூன்று நாட்களாக பணம் தரவில்லை என கூறி காங்கிரஸ் கட்சியின் பணிமனை முன்பு பெண்கள் அமர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.