துவரங்குறிச்சி: மணப்பாறை அருகே அணைக்கரைப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் சீறிப்பாய்ந்தன. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பெரிய அணைக்கரைப்பட்டியில் புனித அந்தோணியர் மற்றும் செபஸ்தியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. இதில் திருச்சி, திண்டுக்கல், கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. காளைகளுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.
அதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இறுதியில் 707 காளைகள், 174 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. நேற்று காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ செல்வராஜ், முசிறி டிஎஸ்பி யாஸ்மின் ஆகியோர் துவக்கி வைத்தனர். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி களத்தில் பல காளைகள் நின்று விளையாடியது.
காளைகள் முட்டி மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 31 பேர் காயமடைந்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக 4 பேர், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், சைக்கிள், டிவி, தங்கக்காசு, வெள்ளிக்காசு, மிக்சி, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சிறந்த காளைக்கு பிரிட்ஜ் மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு டிவி பரிசு வழங்கப்பட்டது.
கிணற்றில் விழுந்த காளை மீட்பு
ஜல்லிக்கட்டில் பங்கேற்று யாரிடமும் பிடிபடாமல் ஓடிய காளை ஒன்று ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சாலையோரத்தில் உள்ள 15 அடி ஆழ தண்ணீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர் இணைந்து கயிறு கட்டி காளையை மீட்டனர். இந்த சம்பவத்தால் 10 நிமிடம் ஜல்லிக்கட்டு போட்டி நிறுத்தப்பட்டது.