முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக பா.ஜனதா கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சுயம்பு(32). இவர் பா.ஜனதா ஐ.டி பிரிவில் மாவட்ட துணை தலைவராகவும், தென்தாமரைகுளம் பேரூராட்சி 15வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து இவர் முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, திமுக வழக்கறிஞர் கோடீஸ்வரன் இதுகுறித்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சுபாஷ் சுயம்புவை கைது செய்தனர். மேலும் இது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.