எடப்பாடியுடன் ஏ.சி.சண்முகம் திடீர் சந்திப்பு

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள தனது வீட்டில் தங்கி தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை நடத்துகிறார். முதல்கட்ட பிரசாரத்தின்போது அவர் தனது பேச்சில் பாஜ பற்றி குறிப்பிடாமலும், அக்கட்சி நிர்வாகிகளை அழைத்துச் செல்லாமலும் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பாஜ நிர்வாகிகள் மேலிடத்தில் புகார் செய்துள்ளனர்.  

இந்த சூழலில், நேற்று காலை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு, கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வந்தார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் வந்திருந்தனர். அவர்கள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு காலை 10 மணிக்கு தொடங்கி 10.40 மணி வரை நடந்தது. பாஜவை அதிமுக புறக்கணிப்பது பற்றி அக்கட்சியினரின் கருத்துக்களை, எடப்பாடியிடம் ஏ.சி.சண்முகம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.

அதிமுக, பாஜ இடையே பூசல் அதிகரித்து வரும் நிலையில், எடப்பாடியுடன் ஏ.சி.சண்முகம் திடீர் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைதொடர்ந்து ஈரோடு வில்லரசம்பட்டியில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் பங்கேற்றார். அதிமுக முன்னாள் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். பின்னர் ஏ.சி.சண்முகம் கூறுகையில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் அதிமுக உள்ளது என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.