எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கட்சியின் பொன்விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில், வரும் 23-ம் தேதி 51 ஜோடிகளின் சமத்துவ சமுதாய திருமணவிழா நடைபெறுகிறது.

இந்த விழாவில், ஆர்.பி.உதயகுமாரின் மகள் திருமணம் உட்பட 51 ஏழை ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமணத்தை டி.குன்னத்தூரிலுள்ள ஜெயலலிதா கோயிலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திவைக்கிறார்.
கடந்த சில மாதங்களாகத் திருமணவிழா ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இடைத்தேர்தல் பணிகளுக்காக ஈரோட்டுக்குச் சென்ற ஆர்.பி.உதயகுமார் இன்று மதுரைக்கு வந்தார்.

டி.குன்னத்தூரில் விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், “எத்தனை நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும், ஜெயலலிதாவுக்குப் பிடித்தமான நிகழ்ச்சி என்றால், அவர் பெயரால் நடைபெறும் திருமண நிகழ்ச்சிதான்.
ஏற்கெனவே ஜெயலலிதா பேரவை சார்பில், அவர் பிறந்தநாளை முன்னிட்டு 180 திருமணங்களை நடத்தியிருக்கிறோம். அம்மாவுக்குப் பிடித்தமான திருமணவிழாவை மீண்டும் நடத்திட கழகத்தின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அனுமதி அளித்தார்.

இந்தத் திருமணவிழாவில் என் மகளுக்கு வழங்குவதைப்போலவே 51 ஜோடிகளுக்கும் திருமணப் பொருள்கள் வழங்கப்படும். ஒரே மாதிரியாக முகூர்த்தப் புடவை, வேட்டி, தாலிக்குத் தங்கம், சீர்வரிசை உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் வழங்கப்படும். 51 ஜோடிகளும் ஒரே மேடையில் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது” என்றார்.