கஸ்டடியை முடித்துவிட்டு சுதீப் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு

மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் இளம் நடிகர் நாகசைதன்யா நடித்துவரும் கஸ்டடி என்கிற படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் தமிழுக்கு வராமல் அப்படியே கன்னடத்திற்கு சென்று கிச்சா சுதீப் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த 2021லேயே பெங்களூரு சென்று சுதீப்பை அவரது வீட்டிலேயே சந்தித்தார் வெங்கட் பிரபு. ஆனால் அப்போது சுதீப்பின் விருந்தோம்பல் பற்றியும் அங்கு சாப்பிட்ட உணவு வகைகள் பற்றியுமே சிலாகித்து பேசினார் வெங்கட் பிரபு. அப்போதே இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றப் போகிறார்கள் என்கிற பேச்சு பரவ ஆரம்பித்தது.. ஆனால் அப்போது சுதீப்பிற்கு விக்ராந்த் ரோணா, கப்ஜா ஆகிய படங்கள் கைவசம் இருந்ததால், வெங்கட் பிரபுவும் தெலுங்கில் நாகசைதன்யா பட வாய்ப்பை ஏற்றுக்கொண்டு வேலை பார்த்து வருகிறார்.

சுதீப்பின் விக்ராந்த் ரோணா ஏற்கனவே ரிலீஸ் ஆகிவிட்ட நிலையில், கப்ஜா திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபுவின் படத்தில் தான் சுதீப் நடிக்க உள்ளார் என்கிற தகவல் தற்போது மீண்டும் கன்னட திரையுலகில் வலுப்பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.