சிவசேனா பெயர், சின்னத்தை ஷிண்டே அணிக்கு ஒதுக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே அணி வழக்கு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் கடந்த 2019-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.

கடந்த ஆண்டு சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கணிசமான எம்எல்ஏக்கள் விலகி பாஜக .வில் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்தனர். அதன்படி கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது.

இதனிடையே சிவசேனாவின் பெயர், சின்னத்துக்கு உரிமை கோரி உத்தவ் தாக்கரே, ஷிண்டே அணிகள் தரப்பில் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த ஆணையம், சிவசேனா பெயர், கட்சியின் வில் அம்பு சின்னம் ஷிண்டே அணிக்கு என்று கடந்த 17-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சிவசேனா கட்சிக்கு ரூ.186 கோடிக்கு அசையும், அசையா சொத்துகள் இருக்கின்றன. அதோடு வங்கிக் கணக்குகளில் ரூ.148.46 கோடி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி சிவசேனா கட்சியின் சொத்துகள், பணம் முழுவதும் தற்போது ஷிண்டே அணிக்கு செல்கிறது.

இந்த சூழலில் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே அணி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக உத்தவ் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் நேற்று முறையிட்டார். மனுவை உடனடியாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதை தலைமை நீதிபதி ஏற்கவில்லை. உத்தவ் தரப்பு மனு குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்தார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது தொடர்பாக உத்தவ், ஷிண்டே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளன. இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது. புதிய வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.