சென்னை | 1,470 விதிமீறல் கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி மேற்கொண்ட கள ஆய்வில் கடந்த2 வாரங்களில் 1470 விதிமீறல் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் மழைநீர் வடிகால் துறையின் மூலம் மழைநீர்வடிகால்கள் தூர்வாரப்பட்டு, பழுதடைந்த மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களில் ஆங்காங்கே விதிகளை மீறி கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மழைநீர் வடிகால்களில் மழைக்காலங்களில் மழைநீர் செல்வது தடைபட்டு நீர்த்தேக்கம் ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், கடந்த 4-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையிலான இரு வாரங்களில் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 1,470 விதிமீறல் கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு, அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. விதிமீறலில் ஈடுபட்டோரிடம் இருந்து ரூ.5 லட்சத்து 9ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை தவிர்க்க வேண்டும். மீறினால் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.