போதிய இயந்திரங்கள் இல்லாததால் குமரியில் அறுவடை பணி பாதிப்பு-விவசாயிகள் தவிப்பு

நாகர்கோவில் :  குமரியில்  போதிய அறுவடை இயந்திரங்கள் இல்லாமல் அறுவடை செய்ய முடியாமல் பல ஏக்கர்  பரப்பளவில் வயல்கள் கிடப்பதால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
குமரி  மாவட்டத்தில் கன்னிப்பூ,  கும்பபூ என இருபோக நெல் சாகுபடி நடக்கிறது. தற்போது  கும்பபூ அறுவடை பணிகள் முழுவீச்சில் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது.  அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய மாவட்டம் முழுவதும் 9 இடங்களில்  நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கொள்முதல் நிலையங்களில் 100 கிலோ நெல் ரூ.2115க்கு கொள்முதல் செய்யப்பட்டு  வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு போதிய அளவு விலை கிடைத்து  வருகிறது.

மேலும் வைக்கோல்களையும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  கடந்த காலங்களில் ஆட்களை  வைத்து நெல் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டது. பின்னர் ஆட்கள் பற்றாக்குறை,  சம்பளம் உயர்வு என்பதால், நெல் அறுவடை இயந்திரத்தை கொண்டு விவசாயிகள்  அறுவடை செய்து வருகின்றனர். தற்போது குமரி மாவட்டத்தில் கும்பபூ அறுவடை  முழுவீச்சில் நடந்து வருகிறது. அறுவடை இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு  ரூ.1500 வாடகையாக செலுத்த வேண்டும்.  இந்த அறுவடை எந்திரங்கள் வேளாண்மை  பொறியியல் துறை ஏற்பாட்டில் விடப்படுகிறது.

மேலும் தனியார் மூலமும்  இயந்திரங்கள் மூலம் அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகிறனர். இதற்கு  வாடகை கொஞ்சம் அதிகமாகும். வேளாண்மை பொறியியல் துறை மூலம் வரும்  இயந்திரத்திற்கு முன்பணமாக விவசாயிகள் ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும்.  அறுவடை  முடிந்த பிறகு அந்த விவசாயிக்கு வேளாண்மை பொறியியல் துறையால் முன்பணம்  திரும்ப வழங்கப்படும்.

குமரி மாவட்டம் பறக்கை பத்தில் சுமார் 2000 ஏக்கர்  பரப்பளவில் நெல் சாகுபடி நடந்துள்ளது அங்கு தற்போது அறுவடை பணிகள் நடந்து  வருகிறது. போதிய அறுவடை இயந்திரங்கள் இல்லாததால் அறுவடை பணிகள்  பாதிக்கப்பட்டுள்ளது.  இது போல் இயந்திரங்கள் தட்டுப்பாட்டால் மாவட்டத்தின் பல பகுதிகளில் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போதிய அறுவை இயந்திரங்களை அறுவடை பணிக்கு  பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

2 ஆயிரம் ஏக்கருக்கு 3 இயந்திரங்கள்

இதுகுறித்து  முன்னோடி விவசாயி பெரிய நாடார் கூறியதாவது: பறக்கை பத்தில் 2000 ஏக்கர்  பரப்பில் கும்பப்பூ அறுவடைப்பணி கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.  தற்போது  3 அறுவடை இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை சுமார்  500 ஏக்கர் பரப்பளவில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. நெல் கதிர்கள் முற்றி  போய் உள்ளது. போதிய இயந்திரங்கள் இல்லாததால் அறுவடை செய்ய முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்பசலனம்  ஏற்பட்டு, மழை வரலாம் என்ற அச்சம் எங்கள் மத்தியில் உள்ளது. மழை வந்தால்,  அனைத்து நெல்மணிகளும் முளைத்து விடும். விவசாயிகளுக்கு பலத்த நஷ்டம் ஏற்பட  வாய்ப்பு உள்ளது. இதனால் பறக்கை பத்தில் விளைந்த நெல்கதிர்களை அறுவடை செய்ய  வேளாண்மை பொறியியல் துறை போதிய அறுவடை இயந்திரங்களை ஒதுக்கீடு செய்ய மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.