வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத அமைச்சர் ராமச்சந்திரனுக்கு உதகை நீதிமன்றம் அபராதம்

உதகை: வெலிங்டன் கன்டோன்மென்ட் வழக்கு தொடர்பாக, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாததால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் கன்டோன்மென்ட் துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு, திமுக – அதிமுகவினர் இடையே குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் வளாகத்தில் மோதல் ஏற்பட்டது. இதில், அலுவலக கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சிலர் தாக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, கன்டோன்மென்ட் நிர்வாகம் தரப்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில், உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாத தமிழக சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஓபிஎஸ் அணி நிர்வாகி எம்.பாரதியார் மற்றும் அப்போது திமுக தரப்பில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வினோத் ஆகிய 3 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பி.முருகன் உத்தரவிட்டார்.

இந்த தொகையை எடப்பள்ளி ஷீரடி சாய்பாபா கோயில் அறக்கட்டளைக்கு வழங்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.