புதுடெல்லி: தேவை அதிகரிக்கும் போது விநியோகத்தை ஊக்குவிக்கவும், பொது சந்தையில் விலைவாசி உயரும் போது அதனைக் கட்டுப்படுத்தவும் இந்திய உணவுக் கழகம் உணவு தானியங்களை விற்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த ஜனவரி 25ம் தேதி அரசின் இருப்பில் இருந்து 30 லட்சம் டன் கோதுமையை விற்க ஒன்றிய அரசு முடிவு எடுத்தது. இந்நிலையில், உயர்ந்து வரும் கோதுமை விலையைக் கட்டுப்படுத்த, இருப்பில் இருந்து மேலும் 20 லட்சம் டன் கோதுமை விற்க இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
