அதானி உடனான தொடர்பு குறித்து பிரதமர் பதில் கூறாதது ஏன்?: மேகாலயாவில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் சாடிய ராகுல்

ஷில்லாங்: ஒவ்வொரு மாநிலத்தையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தாக்கி வருகிறது என்றும் ஒரே சித்தாந்தம் அனைத்து மாநிலங்களிலும் திணிக்கப்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்த மாதம் 27-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள மேகாலயாவில் பரப்புரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தலைநகர் ஷில்லாங்கில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார். கர்நாடகாவில் சட்டமாக்கப்பட்டுள்ள மதமாற்ற தடைச்சட்ட மசோதா மற்றும் முண்டர்கள் மூலமாக தாக்குதல் வழியாக சமூக பிளவை ஏற்படுத்த பாரதிய ஜனதா முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் மற்றவர்களை மதிக்காமல் கொடுமைப்படுத்துபவர்கள் என்று விமர்சித்தார். அதானி உடனான தொடர்பு குறித்து இதுவரை பிரதமர் மோடி பதில் கூறாதது ஏன் என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். அதானியும், மோடியும் விமானம் ஒன்றில் ஒன்றாக அமர்ந்திருக்கும் படத்தை தம் நாடாளுமன்றத்தில் காட்டியதை சுட்டிக்காட்டிய ராகுல் தனது சொந்த வீட்டில் அமர்ந்து இருப்பது போன்று பிரதமர் மோடி அமர்ந்திருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும்போது நாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டது என்றும் ஆனால், தான் பேசும் போது அது தொலைக்காட்சிகளில் காட்டப்பட வில்லை என்றும் ராகுல் குற்றம் சாட்டினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி கோவாவில் பாரதிய ஜனதா வெல்வதற்கு உதவியது போல் மேகாலயாவில் திரிணாமுல் கட்சி வேலை செய்கிறது என்று விமர்சித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.