தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் தாலுகா கருபையன அள்ளி கிராமத்தில் பழங்கால நடுகற்கள் இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்களுக்கு தகவல் வந்தது.
அந்த தகவலின் படி, தர்மபுரி அரசு கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் அந்த பகுதிக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அந்த பகுதியில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் ஒன்றுக் கண்டுபிடிக்கப்பட்டது. அதில், வீரன் ஒருவன் தனது வலது கையில் பெரிய வாளை தலைக்கு மேலே ஓங்கி பிடித்தபடி, இடது கையில் குதிரையை பிடித்தபடியும் உள்ளது.
அதேபோல், கைப்பகுதியில் அரசருக்குரிய பட்டைகள் மற்றும் வீரப்பட்டைகளும், கால்களுக்கு அருகில் கம்பம் ஒன்றும், அதன் மேல் ஒரு சக்கரம் போன்ற அமைப்பும் உள்ளது. மேலும், கம்பத்தில் ஒரு மனித உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்த நடுகல் அருகே சிதைந்த நிலையில் ஒரு சிறிய நடுகல்லும் கண்டறியப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட முதல் கட்ட கள ஆய்வில் இந்த நடுகற்கள் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தை சேர்ந்தது என்று தெரியவந்தது.
இது தொடர்பாக ஆய்வு நடத்திய குழுவினர் தெரிவித்துள்ளதாவது, “இந்த பகுதியில் ஏராளமான தொல்லியல் சின்னங்கள் காணப்படுகின்றன. அதனால், இது தொடர்பாக விரிவாக கள ஆய்வு நடத்தப்படும்” என்றது தெரிவித்தனர்.