வாஷிங்டன்: அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகி மிகப் பெரிய தவற்றை ரஷ்யா செய்துவிட்டதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுத இருப்பை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவும் அணு ஆயுத (நியூ ஸ்டார்ட்) ஒப்பந்தத்தை கடந்த 2010-ம் ஆண்டு செக் குடியரசில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்யா அதிபர் டிமிட்ரி மெத்வதேவும் கையெழுத்திட்டனர். இதன் மூலம் உலகளவில் அணு ஆயுதங்கள் கட்டுக்குள் இருக்கும் என்று நம்பப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஒப்பந்தம் கடந்த 2021 பிப்ரவரி மாதம் காலாவதியானது. இதனைப் புதுப்பிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடவடிக்கை எடுத்து வந்தார். எனினும், உக்ரைன் போர் காரணமாக இது தொடர்பாக அமெரிக்கா விடுத்த பேச்சுவார்த்தையை புதின் நிராகரித்தார். இந்தப் பின்னணியில்தான் அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக புதின் அறிவித்தார்.
இதுகுறித்து மாஸ்கோவில் அவர் பேசும்போது, “உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவும், ஐரோப்ப நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வருகின்றன. இந்தச் சூழலில் நாங்கள் போதும் இந்தப் போரை கைவிட மாட்டோம். அணு ஆயுதக் கையிருப்பை கட்டுக்குள் வைத்திருக்க அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து (நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம்) ரஷ்யா விலகுகிறது. நமது அணு ஆயுத பலத்தைப் பறிக்க ஐரோப்பா நாடுகள் திட்டமிட்டுள்ளன. இனி அமெரிக்கா அணு ஆயுத சோதனை மேற்கொண்டால் நாங்களும் அணு ஆயுத சோதனை நடத்துவோம்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், புதினின் முடிவு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசும்போது, ”அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகி ரஷ்யா மிகப் பெரிய தவற்றை செய்துவிட்டது. இது பொறுப்பான செயல் அல்ல. எனினும் புதின் அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டார் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.