எடப்பாடியின் ஆளுமைக்கு சான்றாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு; திருமாவளவன் வாழ்த்து.!

ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் கூட்டப்பட்டது. அதில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகவும், இரு நீதிபதிகள் அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தது.

அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். பல்வேறு கட்டங்களாக அதன் விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார். அதன்படி ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டதும் செல்லும் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரையில் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்திருந்த திருமண நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி இன்று கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்கள். உச்ச நீதிமன்றத்தில் அற்புதமான தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டிருக்கிறது. பொதுக்குழு நடைபெற்றது செல்லும். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும். தர்மம், நீதி வென்றுள்ளது. அதிமுகவிற்கு இந்த தீர்ப்பு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. நீதிமன்ற தீர்ப்பே சொல்லிவிட்டது. அத்தோடு ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அதிமுகவிற்கும் இடையிலான தொடர்பும் முடிவுக்கு வந்தது.

எங்களுக்கும், அவருக்கும் இனி எந்தவித தொடர்பும் கிடையாது. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி. இனி எழுச்சியோடு அதிமுக செயல்படும். கழகத்தின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்து பேசி அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆவது பற்றி முடிவு செய்யப்படும். ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கி விட்டார். எங்களை பற்றி பேச அவருக்கு தகுதியும் இல்லை. தேவையும் இல்லை. அதுமட்டுமின்றி அதிமுகவிற்காக பாடுபட்டவர்கள், உழைத்தவர்கள் தாராளமாக மீண்டும் வரலாம்.

வளமான பூமியில் வானூர்தி தேவையா….? – தொடரும் போராட்டம்…!

ஒருசிலரை தவிர. மற்ற அனைவரையும் ஏற்றுக் கொள்வோம். கடந்த முறை எனது தலைமையில் ஆட்சி அமைந்த போது விரைவில் களைந்து விடும் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் நான்கு ஆண்டுகாலம் பொற்கால ஆட்சியை தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளோம். யாரும் கவலைப்பட வேண்டாம். அடுத்து அதிமுக தான் ஆட்சி அமைக்கும். இந்த தீர்ப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி என்ற அளவிற்கு கைகொடுக்கும் என்று நம்புகிறோம்’’ என்று அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில்,‘‘அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எமது வாழ்த்துகள். இவ்வாய்ப்பு மீண்டும் பாஜக’வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே.’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.