“கம்யூனிஸ்ட்டுகள் குறித்த பெரியாரின் கருத்துக்கு பதில் சொல்வாரா பொன்முடி…" – அண்ணாமலை கேள்வி

நேற்று முன்தினம், ராஜ் பவனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “காரல் மார்க்ஸின் தத்துவத்தால் நம் நாட்டின் வளர்ச்சி பாதித்தது” என்று கூறியிருந்தார். ஆளுநரின் இத்தகைய கருத்து சர்ச்சையாகவே, “அக்கப்போர்‌ செய்வதை விடுத்து, தனக்கான வேலையை எப்போது செய்யப் போகிறார் ஆளுநர். ஆளுநருக்குரிய வேலை என்னவோ அதில்‌ கவனம்‌ செலுத்துவதே, மக்களின்‌ வரிப்பணத்தில்‌ அவர்‌ பெறும்‌ ஊதியத்துக்கு உண்மையானதாக இருக்கும்‌” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சாடியிருந்தார்.

அமைச்சர் பொன்முடி – ஆளுநர் ரவி

இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இளைஞர்கள் கம்யூனிஸ்ட்டுகளிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று பெரியார் விமர்சித்ததற்கு, பொன்முடி ஏதேனும் கருத்து சொல்வாரா…” எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இது குறித்து அண்ணாமலை தன் ட்விட்டர் பதிவில், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சித்து, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டிருக்கும் அறிக்கையைப் படித்தேன். வழக்கம் போல புரட்டும், போலி பெருமிதமும் நிறைந்த தி.மு.க-வுக்கே உரித்தான அறிக்கை. காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர், பிப்ரவரி 21 அன்று கூறிய கருத்துகளை, பொன்முடி விமர்சித்திருக்கிறார். ஆனால், தி.மு.க-வினரின் கொள்கை தந்தையான பெரியார், திருச்சியில் 1943-ம் ஆண்டு அதே பிப்ரவரி 21 அன்று, `கம்யூனிசம் என்பது இனிப்பு தோய்க்கப்பட்ட விஷ மாத்திரை’ என்றும், `இளைஞர்கள் கம்யூனிஸ்ட்டுகளிடம் கவனமாக இருக்க வேண்டும்’ என்றும் விமர்சித்திருப்பதற்கு பொன்முடி ஏதேனும் கருத்து சொல்வாரா?

அண்ணாமலை

அமைச்சருக்கு சந்தேகம் இருந்தால், தி.க தலைவர் கி.வீரமணி எழுதிய `Collected works of Periyar EVR’ என்ற புத்தகத்தை படிக்கவும். ஆளுநர், தமிழர்களின் பாரம்பர்யம் குறித்தும், திருக்குறள் குறித்தும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்தும் பெருமையாகப் பேசுவது, அமைச்சருக்கு பொறுக்கவில்லை. ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு தவறு என்று கூறினால், அமைச்சருக்கு கோபம் வருவது ஏன்…

தன் ஒரு மகனை நாடாளுமன்ற உறுப்பினராகவும், இன்னொரு மகனை கிரிக்கெட் சங்கத் தலைவராக்கியும் அழகு பார்க்கும் அமைச்சர் பொன்முடி, பொதுவுடைமை குறித்துப் பேசுவதெல்லாம், தி.மு.க-வுக்கே உரித்தான நகைமுரண். பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மை ஆகிவிடும் என்று நினைத்துக்கொண்டு, தன் அறிக்கையில், ஆளுங்கட்சி கவுன்சிலரால் ராணுவ வீரர் கொல்லப்பட்டதை ஒரு வழியாக ஒப்புக்கொண்டிருக்கிறார் அமைச்சர் பொன்முடி.

அமைச்சர் பொன்முடி

ஆனால், அந்த கவுன்சிலர்மீது கட்சிரீதியாக இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கட்சியின் சார்பில் மன்னிப்புகூடக் கேட்காமல், ஒட்டுமொத்த ராணுவ வீரர்களை அவமானப்படுத்துவதை என்னவென்று சொல்வது… இன்றுவரை, கோவை தற்கொலைப் படை தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று சமாளிக்கும் நீங்கள், தங்கள் சகோதரனை இழந்த நாட்டுப்பற்றுமிக்க முன்னாள் ராணுவ வீரர்களின் அறச் சீற்றத்தை மட்டும் பெரிதுபடுத்துவது ஏன்…

அண்ணாமலை

உங்கள் ஆட்சியின் பிரச்னைகள், சட்டம் ஒழுங்கு தோல்வி உள்ளிட்ட இழிவுநிலை குறித்து மக்கள் கேள்வி எழுப்பும்போதெல்லாம், ஆளுநர் மேல் ஏதேனும் குற்றம்சுமத்தி, மக்களைத் திசை திருப்பும் மலினமான முயற்சிகளில் இனியும் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.