கிருஷ்ணகிரி கல்லூரியில் பரபரப்பு; மாணவரின் கழுத்தை அறுத்த சக மாணவர்: உறவுக்கார மாணவிக்கு ‘லவ் டார்ச்சர்’ கொடுத்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கல்லூரி மாணவிக்கு ‘லவ் டார்ச்சர்’ கொடுத்ததை தட்டிக்கேட்ட மாணவனை, சக மாணவன் பிளேடால் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில், பி.எஸ்சி., 3ம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரின் உறவுக்கார பெண், இதே கல்லூரியில் பி.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு அதே கல்லூரியில் பி.ஏ., 3ம் ஆண்டு படிக்கும் மற்றொரு மாணவர் ‘லவ் டார்ச்சர்’ கொடுத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி, தனது வீட்டில் கூறியுள்ளார். இதனால், இருதரப்பிலும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை தொடர்பாக இரு மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று, மாணவிக்கு லவ் டார்ச்சர் கொடுத்த மாணவர் கல்லூரி முன் நின்றிருந்தார். அப்போது மாணவியின் உறவினரான மாணவர் அங்கு ஆவேசமாக வந்துள்ளார். தன்னை தாக்குவதற்காகத்தான் அவர் வருகிறார் என நினைத்த டார்ச்சர் கொடுத்த மாணவர், தான் மறைத்து வைத்திருந்த பிளேடால், மாணவியின் உறவினரான மாணவரின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். கழுத்து அறுபட்ட நிலையில், படுகாயமடைந்த மாணவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.