போதையில் வாகனம் ஓட்டிய 52 பேருக்கு நூதன தண்டனை

திருமலை: போதையில் வாகனம் ஓட்டிய 52 பேருக்கு, மாலை 6 மணி வரை கடற்கரையை சுத்தம் செய்ய வேண்டும் என்று நூதன தண்டனை வழங்கப்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகர் பகுதியில் நேற்று போக்குவரத்து போலீசார் வழக்கமான வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குடிபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 52 பேர் பிடிபட்டனர். அவர்களை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது மாஜிஸ்திரேட், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 52 பேருக்கும் விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரையில் உள்ள குப்பைகளை மாலை 6 மணி வரை சுத்தம் செய்யும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர்கள் 52 பேரையும் போக்குவரத்து போலீசார் உடனடியாக கடற்கரைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு போலீசாரின் மேற்பார்வையில் பெரிய பைகளில் குப்பைகளை சேகரிக்க தொடங்கினர். மாலை 6 மணி வரை குப்பைகளை சேகரித்து அங்குள்ள மாநகராட்சி குப்பை வாகனங்களில் கொண்டு சென்று சேர்த்தனர். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, ‘விசாகப்பட்டினத்தில் குடிபோதையில் வாகனங்களை இயக்குவதால் அதிக அளவில் விபத்துகள் நடக்கிறது.

இதற்கு முன்பு வரை குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து அபராத தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அரசு உத்தரவுப்படி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். தற்போது இவர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டதால் இனி வரும் காலங்களில் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவது குறையும் என எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.