மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்களின் ஆற்றுப்படுத்தலுக்கான உளநல பாதுகாப்பு நிலையம் திருகோணமலையில் திறப்பு!

உளவள பாதுகாப்பிற்கான திருகோணமலை மாவட்ட, உளவள நிலைய அங்குரார்ப்பண நிகழ்வு துளசிபுர நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

பெண்கள், வீட்டு வன்முறை மற்றும் 18 வயதுக்குட்பட்ட பால்நிலை போன்றவற்றால் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது.

அவர்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சினை திருமலை மாவட்ட பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் பிரசாந்தினி உதயகுமார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

சமீபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றுகையில், இன்றைய காலகட்டத்தில் குற்றமிழைத்தவர் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கிடையிலான அதிகார வேறுபாடே பால்நிலை சார் வன்முறைக்கான அடிப்படைக் காரணமாகும்.

இது தவிர சமூக, சமய, பண்பாட்டுக் காரணிகள், தனிப்பட்ட பழக்கங்கள் மற்றும் நடத்தைகள், பொருளாதாரக் காரணிகள், பலவீனத் தன்மை உள்ளிட்ட சூழ்நிலை சார் காரணிகளாலும் இந்நிலை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதிலிருந்து அவர்களை பாதுகாப்பான முறையில் மீட்டெடுப்பதே இந்நிலையத்தின் பிரதான நேக்கமாகும்.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட பெண்களை துரிதமாக இலகு வழியில் ஆற்றுப்படுத்துவதற்காக திருகோணமலை மாவட்ட 7 பிரதேச செயலகப் பிரிவின் கீழ் கடமையாற்றும் இதுதொடர்பான உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்களும் ஒருமித்த பங்குதாரர்களாக பணியாற்றும் போதே, சிறந்த மாற்றத்தை உருவாக்குவதுடன், ஏனையவர்களைப் போன்று பாதிக்கப்பட்டவர்களையும் வாழவைக்க முடியும் என்றார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆணையாளர் றிஸ்வாணி றிபாஸ், உளநல வைத்திய நிபுணர் வைத்தியர் ஹயானி ஜெயவர்த்தன, மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர், திருகோணமலை மாவட்ட பெண்கள் அமைப்பின் உத்தியோகத்தர்கள் மற்றும் 7 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.