ராமராஜனின் ‘சாமானியன்’ படத்தை வெளியிட தடைக்கோரிய வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாமானியன்’ படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர்கள் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், ‘சாமானியன்’ என்கிற பெயரில் படமெடுத்துள்ளனர். இந்தப் படத்தை ராஹேஷ் என்பவர் இயக்கி, இளையராஜா இசை அமைத்துள்ளார். 2022ஆம் ஆண்டு அக்டோபரில் படப்பிடிப்பு துவங்கியிருந்தது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு ஆர்ட் அடிக்ட் என்கிற நிறுவனத்தின் உரிமையாளரான வியன் ஆர்மான் எனவர் ‘சாமானியன்’ என்கிற பெயரில் படத்தை வெளியிடுவதை தடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டில் படத்தின் தலைப்பை பதிவுசெய்து தொடர்ந்து புதுப்பித்து வருவதாகவும், அதே பெயரில் படத்தை வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல் என்பதால் ‘சாமானியன்’ என்கிற தலைப்பில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

image

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எக்ஸட்ரா நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, தாங்களும் அந்தப் படத்தின் தலைப்பை பதிவுசெய்து, அது ஏப்ரல் மாதம் வரை செல்லுபடியாகும் என்பதால் இந்த தலைப்பை பயன்படுத்தியதில் தவறில்லை என வாதிட்டனர். படத்திற்கு 5 கோடி ரூபாயும், விளம்பரத்திற்காக ஒரு கோடி ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார்.

படத் தலைப்பிற்கு காப்புரிமை கேட்க முடியாது என்பதால், வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் அவர் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.