கொத்தடிமை, குழந்தை தொழிலாளர் சட்ட விதிகள் குறித்த நூல்கள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: கொத்தடிமை, குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவது தொடர்பாக தமிழ், ஆங்கிலத்தில் தமிழக தொழிலாளர் துறை தயாரித்துள்ள புத்தகங்களை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

இதுதொடர்பாக தமிழக அரசுவெளியிட்ட செய்திக்குறிப்பு: கொத்தடிமை தொழிலாளர் முறையை 2030-ம் ஆண்டுக்குள்ளும், குழந்தை தொழிலாளர் முறையை 2025-ம் ஆண்டுக்குள்ளும் முற்றிலுமாக அகற்ற தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த இலக்கை அடையும் வகையில், கொத்தடிமை, குழந்தை தொழிலாளர்களை அடையாளம் காணுதல்,விடுவித்தல், மீட்டெடுத்தல், மறுவாழ்வு அளித்தல், இதுதொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தல் போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசுஎடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக தொழிலாளர் துறை தயாரித்துள்ள ‘கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் – தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்’ மற்றும் ‘குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் – தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகள்’ ஆகிய 2 தலைப்புகளிலான தமிழ், ஆங்கில புத்தகங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

கொத்தடிமை தொழிலாளர் முறையின் காரணிகள், சட்ட விதிகள், இதற்கான சட்டப்பூர்வ பாதுகாப்புகள், சட்ட அமலாக்க நடவடிக்கை, விழிப்புணர்வு நடவடிக்கை, பயிற்சி, பயிலரங்கம், குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற தமிழக அரசு வழங்கி வரும் பயன்கள், இதுதொடர்பான உயர்நிலை கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகள் ஆகிய விவரங்கள் இந்த புத்தகங்களில் உள்ளன. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த புத்தகங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.

தலைமைச் செயலர் இறையன்பு, தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை செயலர் முகமது நசிமுதீன், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.