சென்னை: ரயிலை நிறத்தி கற்களை வீசி மோதிக் கொண்ட கல்லூரி மாணவர்கள் – பயணிகள் அச்சம்

கும்மிடிப்பூண்டி அருகே புறநகர் ரயிலை நிறுத்தி இரு கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் கற்களை வீசி மோதிக் கொண்டதில் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து மாநில கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி என முக்கிய கல்லூரிகளில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை – கும்மிடிப்பூண்டி புறநகர் ரயிலில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், அடிக்கடி இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து சென்னை சென்ட்ரலில் இருந்து சூளூர்பேட்டை நோக்கிச் சென்ற புறநகர் ரயிலில் ஒருதரப்பு மாணவர்கள் பயணித்துள்ளனர்.
image
அப்போது பொன்னேரி ரயில் நிலையத்தில் மற்றொரு தரப்பினர், ரயில் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து கவரைப்பேட்டை ரயில் நிலையத்திற்குச் செல்லும் வழியில் பெரியகாவனம் அருகே புறநகர் ரயிலை நிறுத்தி இருதரப்பு கல்லூரி மாணவர்கள் மீண்டும் கத்தியுடனும், கற்களை வீசியும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த மோதலில் காயமடைந்த கல்லூரி மாணவர் ஒருவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
image
ரூட் தல விவகாரத்தில் மாணவர்கள் அடிக்கடி மோதிக் கொள்வதால் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.