டெல்லி மதுபான கொள்கை ஊழல் – கேஜ்ரிவால் உதவியாளரிடம் அமலாக்கத் துறை விசாரணை

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி உதவியாளரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

டெல்லி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்ரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் அமலாக்கத் துறை 2 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 36 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட மதுபான கொள்கை மூலம் கிடைத்த ரூ.100 கோடி லஞ்சப் பணத்தை, அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிகட்சி கோவாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக ஒரு குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக கேஜ்ரிவாலின் தனி உதவியாளர் வைபவ் குமாருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதன்படி, டெல்லியில் உள்ளஅமலாக்கத் துறை அலுவலகத்தில் வைபவ் குமார் நேற்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.