நேற்று காலை முதியவர் ஒருவர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஓடி போய் அவரது கையில் வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் கரூர் மாவட்டம் பாலவிடுதி அருகே உள்ள தூளிபட்டி கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன் என்பது தெரிய வந்தது.
இவர் கடந்த 2021-ம் ஆண்டு தனது மகனுக்கு ஊர் பொது கோவிலில் திருமணம் செய்து வைப்பதற்குச் சென்றபோது அந்த ஊரைச் சேர்ந்த சிலர் அவரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பதால் பொது கோவிலில் திருமணம் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காளியப்பன் பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து விசாரணை செய்துள்ளனர். இதனால் அவர்கள் காளியப்பனை தாக்கி மிரட்டியுள்ளனர். இதில் காயம் அடைந்த காளியப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக காளியப்பன் மீண்டும் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அவர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனால், ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.