நீட் தேர்வு தொடர்பாக அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பபெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

டெல்லி: நீட் தேர்வு தொடர்பாக அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பபெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில் நீட் தேர்வு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என பல வலுவான வாதங்களுடன் தமிழ்நாடு அரசு புதிய மனுவை கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் புதிய மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு மனுவை தாக்கல் செய்திருந்தது. இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது இளங்கலை மருத்துவ படிப்புக்கான மசோதா ஆளுநருக்கு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குடியரசு தலைவரின் பரிசீலனை இருப்பதை சுட்டிக்காட்டி இந்த மனு மீதான விசாரணை 6 மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் மனு மீதான விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளிவைத்திருந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பபெற கோரி  தமிழ்நாடு அரசு கடந்த வாரம் புதிய மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில் இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.