நீட் தேர்வு ரத்தாகுமா? தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீது விரைவில் விசாரணை

புது டெல்லி: நீட் தேர்வு கட்டாம் சட்டத்துக்கு எதிரான ரிட் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது கடந்த அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்பப் பெற திமுக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை அடுத்து, ரிட் மனுவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

இதனையடுத்து, நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்ட திருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி புதிய வழக்கு கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள நீட் தேர்வுக்கு எதிரான புதிய மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அதிமுக தாக்கல் செய்த ரிட் மனு ஏன் திரும்பப் பெறப்பட்டது?

கடந்த 2017-18 ஆம் ஆண்டு நாடு முழுவதும் நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்டத்திருத்ததை மத்திய அரசு கொண்டு வந்தது. நீட் தேர்வு மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு பாதிக்கப்படும் எனக்கூறி தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து நீட் தேர்வு கட்டாம் சட்டத்துக்கு எதிராக, அப்போதைய அதிமுக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு கடந்த முறை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இளங்கலை மருத்துவ படிப்புக்கான மசோதா ஆளுநருக்கு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குடியரசு தலைவரின் பரிசீலனை இருப்பதை சுட்டிக்காட்டி, இந்த ரீட் மனு மீதான விசாரணை அடுத்த 6 மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், இந்த விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளி வைத்தது. இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை திரும்பபெற தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. 

கோரிக்கை மனு மீதான விசாரணையின் போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நீங்கள் எப்படி ரிட் மனுவை தாக்கல் செய்தீர்கள்? இந்த யோசனையை அளித்தது யார்? எனக் கேள்விகள் எழுப்பினர். அதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், இந்த ரிட் மனுவானது கடந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டது என்று பதில் அளித்தார். 

அதற்கு நீதிபதிகள், எந்த ஆட்சியாக இருந்தாலும் இந்த ரிட் மனு எவ்வாறு தாக்கல் செய்யப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர், அதற்கு தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர், கல்வி என்பது பொது பட்டியலில் இருப்பதால், இதுபோன்ற ரிட் மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்று அவர் பதில் அளித்தார். மேலும் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்ட திருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால், பழைய ரிட் மனுவை நாங்கள் திரும்ப பெற அனுமதிக்க வேண்டுமென்று கூறினார். 

தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞரின் வாதங்களை பதிவு செய்துக்கொண்ட நீதிபதிகள், கடந்த அதிமுக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்ப பெற தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளித்தனர்.

நீட் தேர்வுக்கு எதிராக புதிய மனு

கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக திமுக தலைமையிலான தமிழக அரசு புதிய மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், “மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இது ஒரு அதிகார வரம்பு மீறலும், அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரான ஆகும். நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மட்டும் தான் மருத்துவம் மற்றும் அது சார்ந்த படிப்புகளில் சேருவதற்கான அளவுகோலாக இருப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள், அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாகும். அடிப்படை உரிமையான சமத்துவத்துக்கும் எதிரானது எனக் கூறப்பட்டு உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.