போபால் காவல் திறனாய்வு போட்டியில் தமிழக காவல் துறை ஒட்டுமொத்த சாம்பியன்: கோப்பை, பதக்கங்களை முதல்வரிடம் காட்டி வாழ்த்து பெற்றனர்

சென்னை: போபாலில் நடைபெற்ற அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில்சாதனை படைத்த தமிழக காவல்துறை வீரர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில், 66–வது அகில இந்தியகாவல் திறனாய்வு போட்டி, பிப்.13 முதல் 17 வரை நடைபெற்றது. இதில் அறிவியல் சார்ந்த புலன் விசாரணை திறன், கணினி திறன், வெடிகுண்டு தடுப்புத் திறன், மோப்ப நாய் திறன், வீடியோ படம்எடுத்தல் மற்றும் தொழில் ரீதியாகபுகைப்படம் எடுக்கும் திறன் ஆகியவற்றில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழக காவல் துறையிலிருந்து 70 பேர் பங்கேற்றனர்.

இப்போட்டியில், தமிழக காவல் துறையினர் 8 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் என 11பதக்கங்களை வென்று, மத்தியபிரதேச அணியைத் தோற்கடித்து முதல் இடத்தைப் பிடித்து சாதனைபடைத்தனர். மேலும், தடய அறிவியல் புலனாய்வு பிரிவு, குற்றச் சம்பவ இடங்களில் புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோ பதிவு செய்தல், வெடிகுண்டு சோதனை ஆகிய பிரிவுகளில் 3 கேடயங்களையும் வென்றுள்ளனர்.

பயிற்றுநர் மற்றும் குழு மேலாளருமான மதுரை மாநகர காவல் துணை ஆணையர் எஸ்.ஆறுமுகசாமி மற்றும் உதவி பயிற்றுநரான தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் துணைக் கண்காணிப்பாளர் எம்.பாபு ஆகியோர் தலைமையில் அனைத்து போட்டிகளிலும் அதிக மதிப்பெண் பெற்று இந்தியாவின் சிறந்த அணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒட்டுமொத்த ‘சார்மினார் சாம்பியன்ஷிப்’ கோப்பையையும் தமிழக காவல் துறையினர் வென்றுள்ளனர்.

இந்நிலையில், போட்டியில் பங்கேற்ற காவல் துறையினர் முதல்வர்மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்து கோப்பைகள், கேடயங்கள், பதக்கங்களைக் காட்டி வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, உள்துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, டிஜிபி செ.சைலேந்திரபாபு மற்றும் உயர்அதிகாரிகள் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.