விமானத்தில் இருந்து கீழே இறக்கி காங்கிரஸ் மூத்த தலைவர் கைது: டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு .! உச்ச நீதிமன்றம் உத்தரவால் உடனடியாக விடுதலை

புதுடெல்லி: டெல்லியில் இருந்து ராய்ப்பூர் செல்லும் விமானத்தில் இருந்து இறக்கி  காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவை டெல்லி போலீசாரின் உதவியுடன் விமான நிலையத்தில் அசாம் போலீசார் கைது செய்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து இடைக்கால ஜாமீனில் அவர் விடுதலை செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் மாநாடு சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் நேற்று டெல்லியில் இருந்து இண்டிகோ விமானத்தில் ஏறி அமர்ந்தனர். அப்போது திடீரென விமான ஊழியர்களால் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார். இது குறித்து விளக்கம் கேட்டபோது விமான ஊழியர்கள் அவரது பையில் ஏதோ பிரச்னை என்றும் போலீசார் வந்து விளக்கம் அளிப்பார்கள் என்றும் கூறியதாக தெரிகிறது. பவன் கேரா இறக்கிவிடப்பட்டதை கண்டித்து விமானத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் விமானம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே டெல்லி மற்றும் அசாம் போலீசார் விமான நிலையத்துக்கு வந்து பவன் கேராவை கைது செய்தனர். சமீபத்தில் பிரதமர் மோடியை பற்றி அவதூறாக பேசியதாக அசாமில் உள்ள ஹப்லாங் காவல்நிலையத்தில் பாஜவினர் கொடுத்த புகாரின் பேரில் பவன்கேராவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாகவே  பவன் கேராவை அசாம் போலீசார் டெல்லியில் கைது செய்துள்ளனர். அசாம் போலீசார் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே அவர்களுக்கு உதவியதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.  உச்சநீதிமன்றம் அதிரடி: பவன்கேரா கைது செய்யப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாடியது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ‘‘துவாரகா நீதிமன்றம் பவன் கேராவுக்கு வரும் 28ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும். தனக்கு எதிராக அசாம், உத்தரப்பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கேராவின் கோரிக்கை தொடர்பாக இரு மாநிலங்களும் பதிலளிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை பவன் கேரா டெல்லி துவாரகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை பெற்ற பின்னர் நீதிபதி அர்ச்சனா பெனிவால், பவன்கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தவறான எண்ணம் கூடாது: பாஜ செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில், ‘‘காங்கிரஸ் தலைவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற தவறான எண்ணத்துடன் வாழக்கூடாது. பாஜ எது செய்தாலும் அது சட்டப்படி தான் இருக்கும். பிரதமர் மோடி 140 கோடி மக்களின் ஆசிர்வாதத்துடன் இருக்கிறார். அவரை பழிப்பது காங்கிரஸ் கட்சி தனக்கு தானே குழிதோண்டிக்கொள்வது போன்றதாகும்” என்றார். பவன் கேரா கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 2வது செய்தி தொடர்பாளர்: பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக அசாம் போலீசாரால் கைது செய்யப்படும் இரண்டாவது அரசியல் கட்சி செய்தி தொடர்பாளர் பவன் கேரா ஆவார். முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகட்  கோகலே கடந்த ஆண்டு டிசம்பரில் ஜெய்ப்பூரில் இருந்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் அசாம் அழைத்து செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.