புதுடெல்லி: இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல்ஸ்-ஐ, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல்ஸ் இரண்டு நாள் பயணமாக இன்று காலை இந்தியா வந்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை கைகுலுக்கி வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு இந்திய அமைச்சர்கள் மற்றம் உயரதிகாரிகளை அறிமுகப்படுத்தினார். பின்னர், ஜெர்மனி பிரதமருடன் வந்துள்ள அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளை அவர் பிரதமர் மோடிக்கு அறிமுகப்படுத்தினார்.
ஜெர்மனி பிரதமராக ஓலஃப் ஸ்கோல்ஸ் பொறுப்பேற்ற பிறகு அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது. இந்திய – ஜெர்மனி அரசுகளுக்கு இடையே தொடர் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ கடந்த 2011ல் திட்டம் வகுக்கப்பட்டது. அதன் பிறகு இந்தியா வரும் முதல் ஜெர்மனி பிரதமராகவும் ஓலஃப் ஸ்கோல்ஸ் உள்ளார்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க உள்ள ஜெர்மனி பிரதமர், பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இரு தரப்பு உறவு, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் பிரதமரோடு அந்நாட்டு தொழிலதிபர்களும் உடன் வந்துள்ளனர். இரு பிரதமர்களும் இரு நாட்டு தொழிலதிபர்களையும் சந்திக்கவும், இதன்மூலம் முதலீடுகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து நாளை பெங்களூரு செல்லும் ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல்ஸ், அங்கு நடைபெற உள்ள இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான கருத்துப் பரிமாற்ற கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, பொருளாதார முன்னெடுப்புகள், அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்வது உள்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே நெருக்கத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் அதிக அளவில் வர்த்தகத்தில் ஈடுபடும் முதல் 10 நாடுகளில் ஒன்றாக ஜெர்மனி இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் இந்தியாவுடன் அதிக வர்த்தக உறவை மேற்கொள்ளும் நாடுகளில் முதல்நாடாகவும் ஜெர்மனி உள்ளது. இந்தியாவில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளும் நாடுகளில் முன்னணியில் உள்ள நாடாகவும் ஜெர்மனி இருப்பது குறிப்பிடத்தக்கது.