ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – பணம், பரிசு மழை: வாக்காளர்கள் கொண்டாட்டம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் மாலையுடன் வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளருக்கு இடையே தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

வாக்காளர்களுக்கு ஜாக்பாட்!

இந்த தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் வியூகம் அமைத்து பிரசாரம் செய்து வருகின்றனர். அரசியல் கட்சிகளின் பிரசார வியூகம் வாக்காளர்களுக்கு ஜாக்பாட்டாக மாறி இருக்கிறது. தொழிலாளர்கள் நிறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் பலர் கடந்த 20 நாட்களாக வேலைக்கு செல்லாமல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைக்கு செல்வதை விட அதிகளவில் வருமானம் வருவதால் மக்கள் பிரசாரத்தை தொழிலாகவே மாற்றிக் கொண்டனர்.

பிரசாரத்துக்கு எவ்வளவு?

பிரசாரத்துக்கு செல்லும் பெண்களுக்கு தினமும் குறைந்தது ரூ.750 முதல் ரூ. 1000 வரை கிடைக்கிறது. அதோடு இல்லாமல் தேர்தல் பணிமனையில் அமர்ந்து கொண்டால் ரூ. 500 பணம் மற்றும் பிரியாணி, ஆண்களுக்கு ரூ. 500 மற்றும் மது பாட்டிலும் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் இடைத் தேர்தல் பிரசாரத்தை வாக்காளர்கள் ஜாலியாக அனுபவித்தனர்.

ஓட்டுக்கு எவ்வளவு?

ஒவ்வொரு பகுதியிலும் வாக்காளர்களுக்கு விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குக்கர், வெள்ளி கொலுசு, பட்டுபுடவை மற்றும் ஒரு அரசியல் கட்சி சார்பில் ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம், மற்றொரு அரசியல் கட்சி சார்பில் ரூ.2 ஆயிரம் என வழங்கப்பட்டது. இதனால் வாக்காளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் ஒரு கட்சி ஏற்கனவே 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதை அடுத்து மீண்டும் இன்று 2,000 ரூபாய் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனி நபர் வருமானம் உயர்வு!

சில இடங்களில் பட்டு புடவை சரியில்லை என்று கூறி பெண்கள் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் சமூக வலைதளத்தில் வெளியானது. மொத்ததில் இந்த தேர்தல் காரணமாக கிழக்கு தொகுதி வாக்காளர்களின் தனிநபர் வருவாய் அதிகரித்து இருக்கிறது. 20 நாள் பிரசாரம், ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் என ஒவ்வொரு வாக்காளர்களும் சுமார் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சம்பாதித்து உள்ளனர்.

ஸ்மார்ட் வாட்ச் விநியோகம்!

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக திருநகர் காலனி, கிருஷ்ணம் பாளையம், கே.ஏ.எஸ். நகர். திரு.வி.க.வீதி உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் வாட்ச் விநியோகம் செய்யப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இன்னும் ஏதேனும் கிடைக்குமா?

வாக்குப்பதிவிற்கு இன்னும் 2 நாட்கள் இருப்பதால் 2-வது தவணையாக ஏதாவது பணம் மற்றும் பரிசு பொருட்கள் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் வாக்காளர்கள் உள்ளனர். மொத்தத்தில் இந்த தேர்தல் பிரசாரம் மக்களுக்கு முழுநேர தொழிலாகவே மாறி விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.