பெரியகுளம்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் ஓ.பழனியம்மாள் நாச்சியார் (95). இவர், கடந்த 22ம் தேதி உடல் நலக்குறைவால், தேனியில் உள்ள நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று இரவு 9:30 மணியளவில் பழனியம்மாளின் உடல்நிலை மோசமானதாக கூறி மருத்துவமனை நிர்வாகம் செயற்கை சுவாசக் கருவிகளை பொருத்தி, அவரை பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு பழனியம்மாள் நாச்சியார் நேற்று இரவு 10.02 மணியளவில் மரணம் அடைந்தார்.
தகவல் அறிந்த ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து கார் மூலம் பெரியகுளம் வந்தார். வீட்டில் தாயாரின் உடலைப் பார்த்து, கதறி அழுதார். இதை தொடர்ந்து தாயின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பழனியம்மாளின் இறுதிச்சடங்கு இன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்று, பெரியகுளம் நகராட்சி பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்தனர். இறந்த ஓ.பழனியம்மாள் நாச்சியாருக்கு ஓ.பன்னீர்செல்வம் உட்பட 5 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். இதில், ஓ.பன்னீர்செல்வம் மூத்த மகனாவார். தேனி எம்பி ரவீந்திரநாத் பழனியம்மாளின் பேரனாவார்.